Sunday 22 January 2012

எண்பது தொண்ணூறுகளில் ஹிட் கொடுத்த சில சூப்பர் ஹிட் இசையமைப்பாளர்கள்



இளையராஜா உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் சில இசையமைப்பாளர்கள் சத்தமில்லாமல் இசையமைத்து சாதனை புரிந்தனர் அந்த இசையமைப்பாளர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு

வி.எஸ் நரசிம்மன்


சிறுவயதில் இவரின் அச்சமில்லை அச்சமில்லை படப்பாடலான ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடலையெல்லாம் இளையராஜாவின் இசையென்றே நினைத்திருக்கிறேன்.குறிப்பாக இவரின் அச்சமில்லை அச்சமில்லை படப்பாடல்கள் புகழ்பெற்றவை. ஓடுகிற தண்ணியில ஒரசிவிட்டேன் சந்தனத்த போன்ற பாடல்களை கேட்டுகொண்டே இருக்கலாம் பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளராக சில படங்களில் விளங்கினார்.இவர் இசையமைத்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தில் இடம்பெற்ற பூமேடையோ பொன்வீணையோ பாடலும் மேகம் ஒரு மேகம் போன்ற பாடல்களால் நம் உள்ளத்தை மீட்டியவர்.பாலச்சந்தர் இயக்கி முரளி இரட்டை வேடத்தில் நடித்த புதியவன் படத்தில் வந்தது வசந்த காலம்,நானோ கண் பார்த்தேன்,தேன்மழையிலே தினம் நனையும் என் நெஞ்சமே என்று பல சூப்பர்ஹிட் பாடல்களை
கொடுத்தவர் கடைசியாக ரேவதி சுரேஷ்மேனன் படமான பாசமலர்கள் படத்தில் இசையமைத்த பிறகு இவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை


சங்கர் கணேஷ்


இரட்டையர்களான இவர்கள் ப்ளாக் அண்ட்ஒயிட் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகின்றனர்.ஆரம்பத்தில் தேவர் பிலிம்ஸின் பல படங்களுக்கு இசையமைத்து
வந்துள்ளனர் இவர்களின் சம்சாரம் அது மின்சாரம் பாடல்களான ஜானகிதேவி,அழகிய அண்ணி
போன்றபாடல்களும்.இதயத்தாமரை,ஊர்க்காவலன் படத்தின் பாடல்களும்,இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகரனின் பாலைவனச்சோலை படத்தில் இடம்பெற்ற மேகமே மேகமே என்று ஆரம்பிக்கும்
வாணிஜெயராம் குரலும் நம்மை கிறங்கடிப்பவை

சந்திரபோஸ்

 அய்யப்பன் படத்தின் பாடலான பொய்யன்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் என்ற இவரின் அய்யப்ப பக்தி பாடலில் ஜேசுதாஸ் நடித்திருப்பார்.அய்யப்ப பக்தர்களை விட்டு
பிரிக்கமுடியாத பாடலாக அது தற்போது வரை விளங்கி வருகிறது.ரஜினிகாந்திற்க்கு இளையராஜாவை தவிர்த்து இவர் மனிதன்,ராஜா சின்ன ரோஜா,விடுதலை உட்பட சில படங்களில் இசையமைத்து இருக்கிறார்,நல்ல குரல் வளமும் உடையவர் இவர் சமீபத்தில்தான் இவர் மரணமடைந்தார் இவர் பாடல்களில் மிகவும் என்னை கவர்ந்த பாடல்
விடுதலை படத்தில் இடம்பெற்ற நீலக்குயில்கள் ரெண்டு என்ற பாடல் .

மனோஜ் கியான்

இரட்டையர்களான இவர்கள் ஆபாவாணனின் அறிமுகங்கள். ஊமைவிழிகள் படத்தில் இவர்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் குறிப்பாக பி.பி சீனிவாஸ் அவர்கள் பாடிய‌
தோல்வி நிலையென நினைத்தால் ,மாமரத்து பூவெடுத்து மிட்நைட் மசாலா பாடலான ராத்திரி
நேரத்து பூஜையில் பாடல்கள் இன்றுவரை காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கும் பாடல்கள்
இணைந்த கைகள் படத்தில் இடம்பெற்ற அந்திநேர தென்றல் காற்று,மழையோரம் குயில் கூவக்கேட்டேன் போன்ற பாடல்களும் இவரின் செந்தூரப்பூவே பாடல்களும் புகழ்பெற்றவை

கங்கை அமரன்


இளையராஜாவின் தம்பியாக இருந்தாலும் இவர் இசையமைத்த ஜீவா,வாழ்வே மாயம்,சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற படங்களில் இவரின் தனித்துவத்தை காட்டினார் இவரின் சின்னத்தம்பி பெரியதம்பி,வாழ்வே மாயம் படங்களின் பாடல்கள் வெற்றியின் உச்சத்தை தொட்டவை

ஆர்.டி பர்மன்


இவர் இசையமைத்த உயிரே உனக்காக படத்தில் இடம்பெற்ற பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல‌
சிரிக்க போன்ற பாடல்கள் பூமழை பொழியுது படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்.இவர் புகழ்பெற்ற இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.

தேவேந்திரன்


வருத்ததிற்குரிய விஷயம் என்னவென்றால் இவர் இசையமைத்த வேதம்புதிது படத்தின் பாடல்களை இளையராஜா தான் இசையமைத்தார் என்று அதிகம் பேர் நினைப்பதுதான் சமீபத்தில் கூட அ.மார்க்ஸ் என்ற அறிவுஜீவி எழுத்தாளர் இளையராஜாவை திட்டுகிறென் என்று வேதம்புதிது படத்தின் பாடல்கள் ப்ராமணியத்தை வளர்ப்பதாக உள்ளது என்று இளையராஜாவை சாடியிருந்தார்.இவரின் வேதம் புதிது படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா,
மந்திரம் சொன்னேன் வந்து விடு போன்ற பாடல்களும் மண்ணுக்குள் வைரம் படத்தின் பொங்கியதோ காதல் வெள்ளம்,முத்து சிரித்தது முல்லை வெடித்தது போன்ற பாடல்கள் புகழ்பெற்றவை.

பாலபாரதி



இவர் இசையமைத்த அமராவதி படத்தின் பாடல்கள் அஜீத் என்ற புதிய நடிகருக்கு சரியான முகவரி கொடுத்தது.இந்த படத்தின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் இவர் இசையமைத்த மற்றொரு படமான தலைவாசல் படத்திலும் எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட் இவரை போன்ற‌
சிறந்த இசையமைப்பாளர்களையெல்லாம் விட்டுவிட்டு கொலவெறி யில் மூழ்கி கிடப்பது நாம்
இசைக்கு செய்யும் துரோகம்

தேவா


மனசுக்கேத்த மகராசா படத்தில் அறிமுகமான தேவா அதற்கு பின் வந்த வைகாசி பொறந்தாச்சு
படத்தில் தனது பாடல்கள் மூலம் பாப்புலரானார்.பொதுவாக கானா மன்னன் எனப்பெயரெடுத்த தேவா இனிமையான் மெலடி பாடல்கள் மூலமும் மனதை கவர்ந்துள்ளார் காதல் கோட்டை,வாலி,புருஷலட்சணம்,ஆசை போன்ற படங்களின் பாடல்கள் இவரின் நல்ல பாடல்களுக்கு உதாரணமாக சொல்லாம்

சங்கீதராஜன்/ரவீந்தர்
இவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் தமிழில் 13ம் நம்பர் வீடு உட்பட சில திகில்
படங்களுக்கு இசையமைத்தவர் இவர்.இவரின் பூவுக்குள் பூகம்பம் படத்தில் இடம்பெற்ற அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்காதோ என்ற பாடல் என் மனம் கவர்ந்தது

ரவீந்தரும் ஒரு மலையாள இசையமைப்பாளர்தான் இவரின் ரசிகன் ஒரு ரசிகையில் இடம்பெற்ற பாடி அழைத்தேன் ,ஏழிசை கீதமே போன்ற பாடல்கள் சூப்பர்ஹிட் பாடல்கள்  ஆகும்

Wednesday 4 January 2012

சினிமாவில் பெண் இயக்குனர்கள்

எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காணென்று கும்மியடி என்று பாரதி பாடினார் அதற்கேற்ப பல துறைகளில் பெண்களின் பங்கும் அதிகமாக இருக்கிறது.சினிமா இயக்குனர் பொறுப்பை ஆண்களே பார்த்துகொண்டிருந்த காலம் மாறி பெண்கள் சில வருடங்களாக இயக்குனராக மாறி சில ஹிட் படங்களை கொடுத்து வருகின்றனர் அவர்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு.

பி.ஆர் விஜயலட்சுமி


பழம்பெரும் இயக்குனரும் ஆயிரத்தில் ஒருவன்,கப்பலோட்டிய தமிழன் முதலிய படங்களை எடுத்த பி.ஆர் பந்துலுவின் புதல்வி இவர்.ஆரம்பத்தில் டி.வி விளம்பரம்,டி.வி சீரியல்கள் முதலியவற்றிற்க்கு ஒளிப்பதிவு செய்த இவர்.முதன் முதலில் இயக்கிய படம் அரவிந்த்சாமி அவர்கள் நடிப்பில் தாலாட்டு என்ற படம் ஆகும்.இவர் ஒளிப்பதிவில் வல்லவர் இவரின் படங்கள் மட்டுமல்லாது அடுத்த இயக்குனர் படங்களிலும் ஒளிப்பதிவு அருமையாக இருக்கும்.இவரின் முதல் படம் ஓடிய அளவுக்கு இரண்டாவது படமான பாட்டு பாடவா நல்ல கதை இருந்தும் ரகுமான்,லாவண்யா,எஸ்.பி.பி யின் நல்ல நடிப்பு இருந்தும்  எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

ஜானகி செளந்தர்


முதன் முதலில் விஜயையும் அஜீத்தையும் இணைத்தவர் இவர் .இவர் இயக்கிய ராஜாவின் பார்வையிலே படம் பெரிய வெற்றி இல்லாவிட்டாலும் சிறந்த படமாக விளங்கியது.


ஜானகி விஸ்வநாதன்


இவர் இயக்கிய குட்டி என்ற திரைப்படம் அனைவரின் கண்களையும் குளமாக்கிவிடும் வீட்டு வேலை செய்யும் குழந்தைபடும் துன்பங்களை அழகாக படமாக்கியிருப்பார்.குழந்தையின் நடிப்பும் மளிகைகடை அண்ணாச்சியாக வரும் விவேக்கின் நடிப்பும் அருமையாக இருக்கும்.

பிரியா.வி


மணிரத்னத்தின் அசிஸ்டெண்டான இவர் இயக்கிய கண்டநாள் முதல் சிறந்த திரைப்படம் ஆகும்.இவர் நகைச்சுவை கலந்து எடுத்த சத்யராஜ் ,பிரித்விராஜ் நடித்த கண்ணாமூச்சி ஏனடா
சுமாரான நகைச்சுவை படமாகும்.

மதுமிதா



இவர் ஒரு தொழிலதிபர் எனக்கேள்விப்பட்டேன் இவர் இயக்கிய வல்லமை தாராயோ சிறந்த‌
கதையம்சமுள்ள படமாக இருந்தாலும்.பார்த்திபன்,சாயாசிங் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி
இருந்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை

பெண்களே தொடரட்டும் உங்கள் பணி என்றாவது ஒருநாள் சில்வர் ஜூப்ளி படம் கொடுக்க எனது வாழ்த்துக்கள்